சிலாங்கூர், ஜன 18 – இவ்வாண்டு வருகின்ற தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் பத்துமலையில் பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த இரண்டு நாள் அன்னதானமும் தண்ணீர் பந்தலும் பத்துமலையின் அருகிலிருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் முன்புறம் வழங்கப்படவுள்ளது.
சென்ற வருடம் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் இவ்வருடம் 10,000 பக்தர்களுக்கு இடைவிடாமல் தண்ணீர் பந்தலுடன் அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பத்துமலையில் முருகனை தரிசிக்கும் பக்தர்கள் மன நிம்மதியுடன் தாகமின்றி பசியில்லாமல் பக்தியுடன் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும் எனும் நோக்கில் இரண்டாவது ஆண்டாக இந்த அன்னாதனத்தையும் தண்ணீர் பந்தலையும் ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூரின், தலைமை இயக்குநர் மருதையா சுப்பிரமணியம், சுவாமிகளுடனும் பக்தர்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.
காலை முதல் இரவு வரை நடைபெறவிருக்கின்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்களின் அன்னதானத்திலும் தண்ணீர் பந்தலிலும் பக்தர்கள் அனைவரும் பங்கெடுத்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.