
ஜகார்த்தா, அக்டோபர் 3 – இதய நோய் காரணமாக, கடந்த ஜூலை 12-ஆம் தேதி, உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை, அவரது குடும்ப உறுப்பினர்களே தோண்டி எடுத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் விநோதம் என்னவென்றால், சடலத்தை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க மறந்ததால், அதனை அகற்ற சடலம் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுவது தான்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த அந்த 50 வயது பெண்ணின் உடல், சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நேரடியாக இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
எனினும், சடலத்தை கட்டியிருந்த கயிற்றை அகற்ற மறந்து போனதை நினைத்து, அவரது குடும்பத்தார் அமைதியின்றி தவித்ததால், கல்லறையை மீண்டும் தோண்டும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்காக, சம்பந்தப்பட்ட கிராம தலைவரின் ஒப்புதலை பெற குடும்பத்தார் முயன்ற போது அவ்விவகாரம் கிராம மக்களின் கவனத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
தன்னார்வலர்களின் உதவியோடு, கல்லறையை தோண்டி பார்த்தபோது, சடலத்தை கட்ட பயன்படுத்தப்பட்ட கயிறு அப்படியே இருந்ததும் தெரிய வந்தது.
அந்த கயிறு அவிக்கப்பட்ட பின்னர், சடலம் மீண்டும் புதைக்கப்பட்டதை, உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.