வாஷிங்டன், டிசம்பர் 13 – காசா முனையில், ஹமாஸ் ஒன்றுகூடும் மற்றும் பிணைக் கைதிகளையும், ஆயுதங்களையும் பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் சுரங்கத்தில், இஸ்ரேல் இராணுவம் கடல் நீரை இறைக்கத் தொடங்கியுள்ளது.
அந்நடவடிக்கை பல வாரங்கள் வரை நீடிக்கலாம் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி WSJ செய்தி வெளியிட்டுள்ளது. கடல் நீரை பாய்ச்சி அடிப்பதால், ஹமாஸ் சுரங்கத்தை முற்றாக தகர்க்க முடியுமென அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
முன்னதாக, காசா முனையிலுள்ள, ஹமாஸ் சுரங்கத்தை கடல் நீரால் நிரப்புவதற்காக, பெரிய குழாய் அமைப்பு ஒன்றை இஸ்ரேல் நிறுவியதாக செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த குழாய் அமைப்பு முறை வாயிலாக, மணிக்கு ஆயிரக்கணக்கான கன லிட்டர் நீரை சுரங்கத்திற்குள் பாய்ச்சி, வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியுமென நம்பப்படுகிறது.
பிணைக் கைதிகளை பாதுகாப்பான சுரங்கத்தில் மறைத்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.