ஷா ஆலாம், ஜனவரி-6 – கலைநிகழ்ச்சிகளைக் காண வருவோருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தும் சாத்தியத்தை சிலாங்கூர் அரசாங்கம் மறுக்கவில்லை.
அதே சமயம், போதைப்பொருள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை அவர்கள் உள்ளே கொண்டுச் செல்லாதிருப்பதை உறுதிச் செய்ய, அரங்கிற்கு வெளியே scanning இயந்திரங்களும் பயன்படுத்தப்படலாம்.
சுற்றுலா மற்றும் ஊராட்சித் துறைக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Suee Lim அதனைக் கோடி காட்டியுள்ளார்.
பண்டார் சன்வேயில் நடைபெற்ற Pinkfish புத்தாண்டு வரவேற்பு இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நால்வர் உயிரிழந்திருப்பதை அடுத்து அந்நடவடிக்கை உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வரும் புதன்கிழமையன்று நடைபெறவுள்ள ஆட்சிக் குழு கூட்டத்தின் போது அப்பரிந்துரை விவாதிக்கப்படும் என அவர் சொன்னார்.
சிலாங்கூரில் தற்காலிகமாக எந்தவொரு கலைநிகழ்ச்சிக்கும் பெர்மிட்டுகள் வழங்கப்படாது என ஜனவரி 3-ஆம் தேதி சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் ( Datuk Hussein Omar Khan) அறிவித்திருந்தார்.
ஏற்கனவே பெர்மிட் வழங்கப்பட்டு விட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு, அரங்கினுள் போதைப்பொருள் கொண்டுச் செல்லப்படாதிருப்பதை தடுக்க முடியுமென ஏற்பாட்டாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
டிசம்பர் 31-ஆம் தேதி சன்வே லேகூனில் நடைபெற்ற அந்நிகழ்வில் மரணமுற்ற நால்வரும், ecstasy போதை மாத்திரைகளை உட்கொண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய ஆய்வுக் கூட அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது.