கூச்சிங், ஏப்ரல் 23 – சரவாக், கூச்சிங், பத்து கவா, தாமான் டேசா வீராவில், விரைந்து செயல்பட்ட பொதுமக்கள் சிலரால், பெண் ஒருவர் கொள்ளைக்கு இலக்காவதிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
அதே சமயம, அப்பெண்ணை கொள்ளையிட முயன்ற இரு ஆடவர்களில் ஒருவன் எளிதாக பிடிபட்டான்.
காலை மணி 7.54 வாக்கில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை, மோட்டார் சைக்கிளில் அணுகிய இரு ஆடவர்கள் அவரை கொள்ளையிட முயன்றதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண், தனது பையை அவ்வாடவர்கள் பிடுங்கி செல்லாமல் இருப்பதை உறுதிச் செய்ய போராடிக் கொண்டிருந்த போது, நபர் ஒருவரின் வாகனம் திடீரென கொள்ளையர்கள் அமர்ந்திருந்த மோட்டார் சைக்கிளை இடைமறித்து நின்றதாக, படவான் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.
அதன் வாயிலாக, பெண்ணின் பையை இழுக்க முயன்ற ஆடவனை அங்க்கிருந்த பொதுமக்கள் வளைத்து பிடிப்பட்ட வேளை ; மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
எனினும், அவனது பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு ஆடவன் கம்பி நீட்டி விட்டதாக, லிம் சொன்னார்.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுக்கு இலக்கானார். கைதான ஆடவனை, விசாரணைக்காக தடுத்து வைக்க இன்று நீதிமன்றத்திடம் போலீஸ் அனுமதி கோரும்.