
கோலாலம்பூர், ஆக 22- சரவா கூச்சிங்கில் தமது காதலியுடன் இரவு உணவு உட்கொண்டபோது பாராங் கத்தி மற்றும் ஹாக்கி மட்டையினால் ஆடவர் ஒருவரை தாக்கியதாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். 30 வயதுடைய அந்த நபரை முதலில் ஐவர் நெருங்கியுள்ளனர். பணம் கொடுக்க வேண்டியிருந்ததால் அந்த ஆடவரை உணவகத்திலிருந்து தனியாக வெளியே அழைத்துச் சென்று அவரை அக்கும்பல் தாக்கியதாக Padawan மாவட்ட போலீஸ் தலைவர் Lim Jaw Shyong தெரிவித்தார்.
அந்த தாக்குதலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்த ஆடவரை தடுத்து அக்கும்பல் தொடர்ந்து தாக்கியதால் அவர் உடல் மற்றும் கால்களில் காயத்திற்கு உள்ளானார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த ஆடவரின் நிலைமை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அது தொடர்பான காணொளியை வைரலாக்க வேண்டாமென லிம் கேட்டுக்கொண்டார்.