கோலாலம்பூர், டிச 9 – ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலைக்கு ஆதாரமான பல முக்கிய தடயங்களான கைரேகை , மரபணு பரிசோதனையின் மாதிரிகளை போலீசார் பெற்றனர். இந்த முக்கிய தடயங்கள் தடயயியல் பரிசோதனையின் முடிவுக்காக மலேசிய இரசாயன துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்திக்கிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இரசாயனத்துறையின் முடிவு கிடைத்தவுடன் ஜெய்ன் கொலையில் சம்பந்தட்ட தனிப்பட்ட நபர் அல்லது நபர்களை போலீசார் அடையாளம் காண்பார்கள் என அவர் கூறினார். அதே வேளையில் ஜெய்ன் தனது பெற்றோர்களால் துன்புறுத்தப்படவில்லை என்றும், துன்புறுத்தப்பட்டதற்கான பழைய காயங்கள் எதுவும் அவனது உடலில் கண்டறியப்படவில்லையென ஹுசைன் தெரிவித்தார். அந்த சிறுவன் நல்ல முறையில் பராமரிக்கப்பபட்டுள்ளான். எனவே தேவையில்லாத ஆருடங்கள் கூறுவதை தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில் ஜெய்ன் பெற்றோர் மற்றும் அச்சிறுவனின் சடலத்தை முதலில் கண்ட ஆடவர் உட்பட ஐவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் ஜெய்ன் பயின்ற பள்ளியைச் சேர்ந்தவர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும் என ஹுசைன் கூறினார். கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை அச்சிறுவன் அறிந்திருக்கும் சாத்தியம் இருந்திருக்கலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.