குவந்தான், டிசம்பர் 6 – பஹாங், பெந்தோங், ஜாலான் லாமா பெந்தோங்-திராஸிலுள்ள, தங்கும் விடுதி பாணியிலான வீடொன்றில், ஒழுங்கீன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, போதைப் பொருள் மயக்கத்தில் இருந்த பத்து அந்நிய நாட்டு பெண்கள் உட்பட 28 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 12 பேர் உள்நாட்டு ஆடவர்கள். எஞ்சிய 16 பேர் தாய்லாந்தையும், லாவோசையும் சேர்ந்த பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் 19 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குறிப்பாக, அச்சம்பவத்தில், கைதான உள்நாட்டு ஆடவர்கள் சிலர் டுரியான் பழத்தோட்டக்காரர்கள் என, பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.
நள்ளிரவு மணி 12.05 வாக்கில், தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அங்கிருந்தவர்கள் சந்தேகிக்கும் வகையில் காணப்பட்டனர். எனினும், அவர்களிடமிருந்து சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை யாஹ்யா உறுதிப்படுத்தினார்.
கைதுச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததை ஒப்புக் கொண்டுள்ளதால், அவர்கள் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வீட்டை வாடகைக்கு விடும் முன், அதன் உரிமையாளர்கள் கூடுதல் கவனமுடன் இருக்குமாறும் யாஹ்யா அறிவுறுத்தினார்.