கோத்தா பாரு, டிசம்பர் 21 – கிளந்தான், கோத்தா பாரு, ஜாலான் சுல்தான் இப்ராஹிம் சாலையிலுள்ள, எண்ணெய் நிலையத்திற்கு முன்புறம், கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அக்காரை ஓட்டி வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 3.19 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, கோத்தா பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ரோஸ்டி டாவுட் உறுதிப்படுத்தினார்.
அப்பெண் செலுத்திய கார் மொதுவாக வந்து, சாலை சந்திப்பில் நிற்காமல் நேரே எதிரில் இருந்த சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது, தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டும் போதே அப்பெண் மயங்கி விழுந்ததால், சாலை சந்திப்பில் நிற்காமல் கார் சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுவதாக, ரோஸ்டி சொன்னார்.
எனினும், அப்பெண் உயிரிழந்ததற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய, சடலம் சவப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தில் குற்றச்செயல் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.