ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 19- பினாங்கு, ஆயிர் இத்தாம், ஜாலான் செமாராக் ஆபியிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பின், பத்தாவது மாடியிலுள்ள, வீடொன்றில், தீ மூண்டதை தொடர்ந்து, தப்பி வெளியேறிய மூவர் மூச்சுத் திணறலுக்கு இலக்காகினர்.
40 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்ட தாய் மற்றும் அவரது இரு மகன்களையும், இதர குடியிருப்பாளர்கள் காப்பாற்றிய வேளை; பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் அவர்களுக்கு முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில்,நேற்றிரவு மணி 9.59 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, பாயா துருபோங் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு கமாண்டோ முஹமட் ஜைனி ஜைனுடின் உறுதிப்படுத்தினார்.
அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியிலுள்ள வீடொன்றில் தீ ஏற்பட்ட வேளை ; தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாக ஜைனுடின் சொன்னார்.
எனினும், ஏழு நிமிடங்களில், தீ இதர வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அந்த தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.