கோலாலம்பூர், நவம்பர் 27 – கெந்திங் செம்பா சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை.
அது தொடர்பில் வைரலான வீடியோ போலியானது என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது வெளிநாட்டில் நிகழ்ந்த சம்பவம் என நம்பப்படுவதாகவும், கெந்திங் செம்பா சுரங்கப்பாதையில், நிலச்சரிவு எதுவும் நிகழவில்லை எனவும், பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சைஹாம் முஹமட் கஹார் உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவம் கெந்திங் மலைப் பகுதியில் நிகழ்ந்தது அல்ல என குறிப்பிட்ட சைஹாம், வைரலான வீடியோவை இதற்கு முன்னரே தாம் பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அச்சம்பவம், கெந்திங் செம்பாவில் நிகழ்ந்திருந்தால், உடனடியாக அது குறித்து போலீஸ் அல்லது நெடுஞ்சாலை வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் என்றாரவர்.
முன்னதாக, சுரங்கப்பாதை நுழைவாயிலில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை குறிக்கும் 50 வினாடி காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.