ஜொகூர் பாரு, டிச 4 – இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் டத்தோ பட்டம் கொண்ட ஒரு தொழிலதிபர் உட்பட ஐந்து பேர், பாசிர் கூடாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், டத்தோ லூங் சான் யோவ், 46; வோங் ஃபூக் லோய், 46; மற்றும் சாய் சூன் ஃபூ, 54 ஆகியோர் மீது இன்று திங்கள்கிழமை மாஜிஸ்திரேட் R. ஷாலினி முன் குற்றச்சாட்டுகள் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட போது தலையை அசைத்து அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்களில் மியான்மார் நாட்டவர்களான வின் மின் ஹ்லாய்ங் , 30 மற்றும்காவுங் மியாட் ஃபியோ, 26 ஆகிய இருவருக்கு மலாய், ஆங்கிலம் அல்லது மாண்டரின் மொழி எதுவும் தெரியாததால் அவர்களுக்குக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படவில்லை.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் பாசிர் குடாங்கில் உள்ள ஜாலான் சகாய் 6, தாமான் பாசிர் புடத்தே, பாசிர் குடாங்கில் 22.5 கிலோ எடைகொண்ட “methylenedioxymethamphetamine” (MDMA) பவுடர், 365 கிராம் MDMA மாத்திரைகள் மற்றும் 673 கிராம் MDMA பவுடர் ஆகியவற்றை விநியோகித்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.