புத்ரா ஜெயா, ஜன 11 – முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனின் மனைவி நைமா காலித் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி (MACC) தெரிவித்திருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொண்டிருக்கும் உயர் மதிப்புடைய சொத்துக்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் நைமாவும் அவர்து இரு மகன்களான முஹம்மட் அமான் மற்றும் முஹம்மட் அமீன் அழைக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சொத்துக்கள் அவர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் இருப்பதோடு டைய்ம் மீதான விசாரணையில் தொடர்பு இருப்பதாக எம்.ஏ.சி.சி குறிப்பிட்டுள்ளது.
எம்.ஏ.சி.சி சட்டத்தின் 36 ஆவது விதியின் உட்பிரிவு (1) உட்பிரிவு ( b ) யின் கீழ் விசாரணை தொடர்பில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 7ம் ஆம் தேதி டைய்ம் குடும்பத்தற்கு எம்.ஏ.சி.சி அறிக்கை வழங்கியது. பண்டோரா (Pandora) அறிக்கையில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு டைய்மிற்கு எதிரான விசாரணை தொடங்கியதாக எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது. டைய்மிற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து விசாரணை இன்னமும் தொடர்வதாகவும் எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது. இதனிடையே டைய்ம் மனைவி மற்றும் அவரது இரு மகன்களிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தியிருப்பதை அவர்களது வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் இதற்கு முன் சாடினார்.