பாசிர் சாலாக், நவம்பர் 24 – கம்போங் காஜாவிலுள்ள, பேராக் தெங்ஙா நிர்வாக வளாகத்தில், நேற்று காலை நான்கு சிறுவர்கள் ஆதரவின்றி கைவிட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
நேற்று காலை மணி 10.50 வாக்கில், 11 மற்றும் மூன்று வயதான இரு சிறுவர்கள், ஆறு வயது சிறுமி உட்பட பிறந்து பத்து மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்றும், ஆதரவின்றி கைவிட்டுச் செல்லப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பில், மாலை மணி 5.39 வாக்கில், கம்போங் காஜா சமூக நலத் துறை அதிகாரியிடமிருந்து தகவல் கிடைத்ததை, பேராக் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹபிசோல் ஹெல்மி ஹம்சா உறுதிப்படுத்தினார்.
தோயோத்தா ரக காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்நால்வரையும், நிர்வாக மையத்தின் பாதுகாவலர் முகப்புக்கு முன் இறக்கி விட்டுச் சென்றது, தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில், 11 வயது சிறுவனிடம் விசாரித்ததில், பாரிட், கம்போங் கூச்சாயிலுள்ள பாட்டியால், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்நான்கு சகோதரர்களும் தற்சமயம் கோபெங் சிறார் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் வேளை ; அவர்களின் பெற்றோர்கள் அல்லது உறவினரை தேடும் பணிகளை போலீஸ் மேற்கொண்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், 012-6477452 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.