கேம்பிரிட்ஜ், பிப்ரவரி 2 – அமெரிக்கா, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று, உயர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய “அதிர்வு” மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.
அந்த மாத்திரை, “Gastric” எனப்படும் இரைப்பை திரவத்துடன் கலக்கும் போது, அதிர்வுற்று வயிற்றில் இருக்கும் நரம்புகளை தூண்டுகிறது.
அதனால், அந்த மாத்திரையை உட்கொண்டால், வயிறு நிறைவாகவே இருப்பதை போல ஓர் உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் உடல் எடையை குறைக்க அந்த மாத்திரைகள் சிறந்த தேர்வாக அமையுமென பலர் நம்புகின்றனர்.
இதற்கு முன், உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் பன்றிகளுக்கு அந்த மாத்திரைகளை கொடுத்து பரிசோதனை செய்யப்பட்ட வேளை ; அந்த மாத்திரைகள் பன்றிகளின் ஹார்மோன்களின் வெளியீட்டை தூண்டி, உணவு உட்கொள்வதை சுமார் 40 விழுக்காடு குறைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் எடையை குறைக்க அல்லது பசியைக் கட்டுப்படுத்த விரும்பும் ஒருவர், ஒவ்வொரு முறையும் உணவு உட்கொள்வதற்கு முன் அந்த அதிர்வு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என அந்த ஆராய்சியாளர்கள் குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் முன்னாள் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழக பட்டதாரியும், தற்சமயம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பொறியியல் இணைப் பேராசிரியருமான முனைவர் ஷ்ரியா சீனிவாசன் கூறியுள்ளார்.
அதோடு, “VIBES’ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த மாத்திரைகளை உட்கொள்வதால் பக்க விளைவுகளையும் குறைக்க முடியும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், மூளைக்கும் வயிற்றுக்குமான தொடர்பை கட்டுப்படுத்தி, அதிர்வு வாயிலாக ஒருவர் உணவு உட்கொண்டதை போல நிறைவாக உணரும் சூழலை அந்த மாத்திரை ஏற்படுத்துகிறது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சயின்ஸ் அட்வான்சஸில் (Science Advances) அறிவியல் சஞ்சிகையில், ஷ்ரியா சீனிவாசனின் அந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.