கோலாலம்பூர், ஜன 8 – கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆவணங்களை கொண்டிருக்காத 31 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். சூரியா கே.எல்.சி.சி, பெவிலியன் புக்கிட் பிந்தாங், ஆகிய இடங்களில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட பயண அனுமதி பாஸ்களை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பில் 19 மற்றும் 50 வயதுடைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குனர் ஜாஃப்ரி எம்போக் தெவித்தார்.
தேசிய குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்போடு இரவு மணி 9.30க்கு தொடங்கிய இந்த நடவடிக்கையின்போது 46 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இரண்டு இடங்களில் அதிகமான வெளிநாட்டவர்கள் கூடுவது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து புக்கிட் பிந்தாங் உட்பட இரண்டு இடங்களில் சோதனை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக வேவு தகவல்களை திரட்டிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 120 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக ஜாஃப்ரி எம்போக் கூறினார்.