பெட்டாலிங் ஜெயா, மார்ச் 5 – சிலாங்கூர், அங்சா தீவின், கடல் பகுதியில் இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், மலேசிய கடற்படையின் அமலாக்க நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை, CAAM எனப்படும் மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
காலை மணி 9.20 வாக்கில், அந்த ஹெலிகாப்டர் இறுதி முறையாக தொடர்புக் கொள்ளப்பட்டது.
எனினும், அந்த ஹெலிகாப்டரிடமிருந்து அவசர அழைப்பு எதுவும் பெறப்படவில்லை என, மலேசிய விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மஹ்மூட் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் அடையாளம் காணப்பட்டது.
சம்பவத்தின் போது அந்த ஹெலிகாப்டரில், விமானி உட்பட நான்கு பயணிகள் இருந்த வேளை ; அவர்கள் அனைவரும் மீட்பு ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதையும் நோராஸ்மான் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவத்தின் வீடியோவும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலானது.
அவ்விபத்து, இன்று காலை, சிலாங்கூர், குவாலா சிலாங்கூர், அங்சா தீவுக்கு அருகே, சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் நிகழ்ந்த வேளை ; பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.