கூச்சிங், மார்ச் 10 – அடுத்த மாதம் 6,000 புதிய ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஸ்ம்னா அட்னான் தெரிவித்திருக்கிறார்.
சரவாக் உட்பட பல இடங்களில் இருந்துவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 6,000 ஆசிரியர்களும் கட்டம் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அஸ்ம்னா அட்னான் கூறினார்.
தற்போது சரவாக்கில் சுமார் 2,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்த வினவப்பட்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த டிசம்பர் மாதம் வரை சரவாவிற்கு 1,100 புதிய ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் அவர்களில் அடங்குவர் என அஸ்ம்னா அட்னான் கூறினார்.