செலாயாங், அக்டோபர்-4 – குளோபல் இக்வான் நிறுவனம் நடத்தி வந்த சிறார் இல்லத்தைச் சேர்ந்த சிறுவனைத் துன்புறுத்தியதாக, ஓர் ஆடவர் மீது சிலாங்கூர், செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 35 வயது Mohd Syahid Hanapiah குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
ரவாங், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியிலிருந்த சிறார் இல்லத்தின் பராமரிப்பாளருமான அவ்வாடவர், 6 வயது சிறுவனுக்கு காயம் ஏற்படக்கூடிய அளவுக்கு பிரம்பால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
10,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அந்நபரை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், நவம்பர் 5-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.
சிறார் துன்புறுத்தல், முறைத் தவறிய சமய போதனை உள்ளிட்ட புகார்கள் தொடர்பில், செப்டம்பர் 11-ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள குளோபல் இக்வானுக்குச் சொந்தமான 20 சிறார் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதன் போது 402 சிறார்களும் பதின்ம வயதினரும் மீட்கப்பட்டு, தற்சமயம் சமூக நலத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.