புத்ராஜெயா, பிப்ரவரி 15 – கடந்தாண்டு நெடுகிலும், மொத்தம் 18 ஆயிரத்து 792 ஆசிரியர்கள், புதிதாக பணி அமர்த்தப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில், ஒன்பதாயிரத்து 155 ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகளிலும், எஞ்சிய ஒன்பதாயிரத்து 637 ஆசிரியர்கள், இடைநிலைப் பள்ளிகளிலும் பணி அமர்த்தப்பட்டனர்.
நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்கு விரைந்து தீர்வுக் காண, கல்வி அமைச்சு, SPP எனும் கல்வி ஆலோசக ஆணையத்துடன் இணைந்து அணுக்கமாக செயல்படும்.
நடப்பு தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இருப்பதை உறுதிச் செய்ய இரு தரப்பினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.
அதே சமயம், SPP – கல்வி ஆலோசக ஆணையம், கடந்த வாரம், கல்வித் துறை சாராத ஆறாயிரத்து 315 பட்டதாரிகளை, கல்வி துறை சார்ந்த DG41 கிரேட்டில், ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தியுள்ளது.
நாட்டின் கல்வித் துறையை மறுசீரமைக்கும் மடானி அரசாங்கத்தின் தீவிர கடப்பாடை அது குறிப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.