புத்ராஜெயா, ஜனவரி 12 – மைஏர்லைன்ஸ் (MYAirline) விமான சேவை நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பணத்தையும் தந்து முடிக்க வேண்டும். அதோடு, முன்னாள் பணியாளர்களுக்கான சம்பள பாக்கியையும் தந்து தீர்க்க வேண்டும்.
அதுவரை, நிபந்தனைக்கு உட்பட்டோ அல்லது வேறு எந்த விதமாகவோ, அந்நிறுவனத்துக்கு வான் போக்குவரத்து சேவைக்கான உரிமம் வழங்கப்படாது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மைஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மிக அண்மைய நிலை குறித்து அறிய, கூடிய விரைவில், அந்நிறுவனத்துடனும், “Mavcom” எனப்படும் மலேசிய வான்போக்குவரத்து துறையுடனும் தாம் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் லோக் கூறியுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிற்பாதியில், மத்திய கிழக்கு முதலீட்டாளருடன் விற்பனை – கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மைஏர்லைன்ஸ் நிறுவனம், நிபந்தனைக்கு உட்பட்ட சேவை உரிமத்திற்காக, CAAM – மலேசிய பொது விமான போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருப்பதாக வெளியான செய்தி தொடர்பில், லோக் அவ்வாறு கருத்துரைத்தார்.