தோக்யோ, டிச 16 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தோக்யோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சு நடத்தினார். அதோடு மலேசியா – ஜப்பான் பங்காளித்துவ புரிந்துணர்வு உடன்பாட்டையும் அவ்விரு தலைவர்களும் அறிவித்தனர்.
அதிகாரத்துவ பாதுகாப்பு மீதான ஜப்பானின் உதவிக்கான உடன்பாடு மற்றும் அது தொடர்பான குறிப்புகள் பறிமாறிக் கொண்ட நிகழ்வையும் அன்வாரும் ஃபுமியோ கிஷிடாவும் பார்வையிட்டனர்.
இந்த உடன்பாட்டின் கீழ் பாதுகாப்புக்கான கண்காணிப்பு மற்றும் அது தொடர்பான உபகரங்களுக்கான உதவிகளை ஜப்பான் வழங்கும். மேலும், மலேசிய விண்வெளி நிறுவனத்திற்கும், ஜப்பான் விண்வெளி நிறுவனத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கான கையெழுத்திடும் நிகழ்வையும் அவர்கள் பார்வையிட்டனர்.
ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதிய உணவுக்கு பின் ஜப்பானின் மூன்று பன்னாட்டு நிறுவனங்களான ரோம் வாகோ, தோஷிபா மற்றும் மிட்சுய் & கோ ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் நேரடி பேச்சுக்களை நடத்தவிருக்கிறார்.
அதன்பிறகு ஜப்பானிய தொழிலதிபர்களுடன் மாலை மணி 4.15அளவில் வட்ட மேஜை மாநாட்டிலும் அன்வார் கலந்து கொள்ளவுள்ளார்..