பத்து பஹாட், மார்ச் 27 – ஜோகூர், பத்து பஹாட்டிற்கு அருகில், தோங்காங் பெச்சா (Tongkang Pechah) எனுனிடத்தில், விபத்தில் சிக்கி, MPV வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், மண்வாரி இயந்திரத்தின் உதவியோடு மீட்கப்பட்டார்.
எனினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த 69 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை, பத்து பஹாட் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
அவ்விபத்து, நேற்று மாலை மணி நான்கு வாக்கில் நிகழ்ந்தது.
33 வயது பெண் ஒருவர் செலுத்திய தோயோத்தா எஸ்டிமா ரக MPV வாகனம், திடீரென சாலை சந்திப்பிலிருந்து, முதன்மை சாலைக்குள் புகுந்த அம்மூதாட்டி செலுத்திய மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அவ்விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.