ஷா அலாம், பிப் 9 – சபக் பெர்னாமில் வங்கிகளில் வேலை செய்துவரும் 11 பாதுகாவலர்கள் வேலை முடிந்து கைதுப்பாக்கிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வார காலமாக அந்த பாதுகாவலர்களின் நடவடிக்கையை கண்காணித்த பிறகு செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். அவர்களில் சில பாதுகாவலர்கள் அந்த துப்பாக்கிகளை தங்களது படுக்கையின் கீழ் வைத்திருந்தனர்.
இன்னும் சிலர் அலமாரிகளிலும், மேலும் பலர் தங்களது கார்களிலும் அந்த துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அவர் கூறினார். அதோடு இந்த பாதுகாவலர்களில் சிலர் சாதாரணமாக தங்களது தோளில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றதையும் தாங்கள் கண்டுள்ளதாக Hussein தெரிவித்தார். போலீஸ் மேற்கொண்ட பரிசோதனையில் 11 கைத் துப்பாக்கிகள் மற்றும் 55 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.