
1930-ஆம் ஆண்டு வாக்கில், பணமும், படிப்பறிவும் இன்றி சீனாவிலிருந்து மலாயாவிற்கு புலம்பெயர்ந்த லிம் கோ டோங், ஒரு நாள் கெந்திங் சாம்ராஜ்ஜியத்தின் தோற்றுனராக மாறுவார் என ஒரு போதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
தனது வாழ்நாளில், மலேசியாவின் மிக முக்கியமான நபராகவும், கோடிஸ்வரர்களில் ஒருவராகவும் வலம் வந்தார். எனினும், 2007-ஆம் ஆண்டு லிம் கோ டொங் காலமானதிலிருந்து இன்று வரை, அவரது சாம்ராஜ்யத்தில் சொத்து சண்டை ஓய்தப்பாடிலில்லை.
ஆகப் புதிதாக, லிம் கோ டொங்கின் இரு பேத்திகள், தங்கள் தாயாரின் உயிலை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர்.
லிம் கோ டொங்கின் இளைய புதல்வியான சியூ கிம், கடந்தாண்டு ஜூலை மாதம், கருப்பை புற்றுநோய் காரணமாக, தனது 73-வது வயதில் காலமானார்.
எனினும்,160 கோடி ரிங்கிட் பெருமானமுள்ள சொத்துகள் தொடர்பில் சியூ கிம் விட்டுச் சென்ற உயில், மருந்துகளின் போதையில், கட்டாயத்தின் பேரில் கையெழுத்திடப்பட்டது என அவரது இரு புதல்விகள் வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்த உயில்படி, சியூ கிம்மின் 70 விழுக்காட்டு சொத்துகள், அவரும் அவரது கணவரும் இணைந்து தோற்றுவித்த Dimkim அறவாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள வேளை ; இதர 30 விழுக்காடு அவரது புதல்வர் Marcus-சுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Cressa Chan எனும் அவரது புதல்விக்கு ஒரு கோடி ரிங்கிட் வழங்கப்பட்டுள்ள வேளை ; வழக்கு தொடுத்த இதர இரு புதல்விகளுக்கு முறையே ஒன்பது லட்சம் ரிங்கிட்டும், ஒரு லட்சம் ரிங்கிட்டும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், சியூ கிம்மின் அந்த உயில் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென கோரி அவ்விருவரும் வழக்கு தொடுத்துள்ளனர்.