செப்பாங், பிப் 12 – இவ்வாண்டு 27.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கை அடைய முடியும் என “Tourism Malaysia” எனப்படும் மலேசிய சுற்றுலாத்துறை நம்பிக்கை கொண்டுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த இலக்கை அடையமுடியும் என Tourism மலேசியாவின் தலைமை இயக்குனர் அம்மார் அப்துல் கபார் தெரிவித்தார். அரசாங்கத்தின் வாடகை விமானத் திட்டத்திற்கான பெரிய அளவிலான மான்ய ஊக்குவிப்பு, விசா விலக்களிப்பு மற்றும் சுற்றுலாவை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் இவற்றில் அடங்கும் என அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 20 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 19.3 மில்லியன் சுற்றுப்பயணிகளை விட இது அதிகமாகும். மலேசியாவுக்கான கூடுதல் வாடகை விமானங்கள் சேவையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். சுற்றுலா இலக்கை அடைவதற்காக புதிய மார்க்கங்களுக்கான விமானச் சேவையை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என அம்மார் அப்துல் கபார் தெரிவித்தார்.