கோத்தா பாரு, செப்டம்பர்-29 – கிளந்தான், கெத்தேரேவில் அம்புலன்ஸ் வாகனத்தின் வழியை மறித்து வைரலான pickup லாரி ஓட்டுநர், விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கோத்தா பாரு மாவட்ட போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறைக்கு வருமாறு, போலீஸ் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணைக்கு உதவ அம்புலன்ஸ் ஓட்டுநரும் அழைக்கப்பட்டிருப்பதாக, கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் ரொஸ்டி டாவுட் (Mohd Rosdi Daud) தெரிவித்தார்.
Ketereh, Padang Lembek சாலை சந்திப்பில் நேற்றிரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த சம்பவத்தில், பல முறை சைரன் ஒலி எழுப்பப்பட்டும், Mitsubishi Triton ரக pickup லாரி, அம்புலன்ஸ் வண்டிக்கு இடம் கொடுக்காமல் வழியை மறித்து நின்றிருந்தது.
அச்சம்பவம் 46 வினாடி காணொலியாக டிக் டோக்கில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அம்புலன்ஸ் வண்டியின் வழி மறித்தால், 2,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என ரொஸ்டி எச்சரித்தார்.