ஜோகூர் பாரு, ஜன 4 – ஜோகூர் , ஸ்கூடாயில் பல்வேறு கடை வீடுகளில் தங்கியிருந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 11 வயது சிறுவன் உட்பட 28 வெளிநாட்டினரை குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.
‘OPS Sapu’ என்ற பெயரில் இன்று அதிகாலை மணி 12.50 அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஆவணங்கள் மற்றும் வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த சில கடை வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் மியன்மார், இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த 20 ஆடவர்களுடன் ஏழு பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டது.