கோலாலம்பூர், பிப் 7 – சரவாக் ஆளுநராக துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் காலி செய்த மேலவைத் தலைவர் பதவியை பெறுவதற்காக இரண்டு முக்கிய கட்சிகளான அம்னோ மற்றும் சரவா கட்சிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்னோ மற்றும் வான் ஜுனைடியின் GPS சரவா கூட்டணியும் மேலவை தலைவர் பதவியை பெறுவதில் ஆர்வமாக உள்ளன. வான் ஜுனைடி மற்றும் GPS கட்சியும் இயல்பாகவே மேலவை தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்ததால் இப்போது இதர கட்சிகள் அந்த பதவியை பெறுவதற்கு பகிரங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே வேளையில் இறப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மேலவை தலைவர் பதவி காலியாகுமானால் அதே கட்சியை சேர்ந்த ஒருவரே வகிக்க முடியும். ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் GPS கூட்டணி மட்டுமின்றி இதர கட்சியைச் சேர்ந்தவர்களும் மேலவை தலைவர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கக்கூடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களது தலைவர்களில் ஒருவர் மேலவை தலைவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என GPS எதிர்ப்பார்ப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசுப் தெரிவித்திருக்கிறார். எனினும் இதனை உறுதிப்படுத்த முடியாது, இந்த விவகாரம் குறித்து முடிவு செய்வதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடமே கட்சி விட்டுவிடுவதாக அவர் விவரித்தார்.