ஜோகூர் பாரு, ஜன 28 – ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் இன்று ஜோகூர் ரீஜெண்ட் அல்லது இடைக்கால சுல்தானாக நியமிக்கப்படுவார். அடுத்த வாரம் அவரது தந்தையார் சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் 17ஆவது பேரரசராக நியமிக்கப்படவிருப்பதை முன்னிட்டு இன்று நடைபெறும் சடங்கில் இடைக்கால சுல்தானாக துங்கு இஸ்மாயில் நியமிக்கப்படுவார். இன்று காலை மணி 10 அளவில் ஜோகூர் பாரு இஸ்தானா புக்கிட் செரேனில் நடைபெறும் இந்த சடங்கை சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரது பிள்ளைகளும் பார்வையிடுவார்கள். ஜோகூர் மந்திரிபுசார் டத்தோ ஒன் ஹபிஸ், ஜோகூர் அரச மன்றத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹீம் ரம்லி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். நாட்டின் பேரரசராக ஜனவரி 31ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் அரியணை அமரவிருக்கிறார்.