தாவாவ், நவம்பர் 30 – சபா, தவாவ், வகுபாவிலுள்ள, விவசாய கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட குளோரின் கசிவை சுவாசித்த அந்நிய தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார்.
அவருடன், மூச்சுத் திணறலுக்கு இலக்கான இதர ஐவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று காலை மணி 11 வாக்கில், 19 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் தாவாவ் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக, தாவாவ் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் ஜெமிசின் உஜின் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவரின் நிலை மட்டும் மோசமாக இருக்கும் வேளை; எஞ்சியவர்கள் குணமடைந்து வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட விவசாய கட்டுமானப் பகுதியில், நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டிந்த அந்த அந்நிய தொழிலாளர்கள், நிலத்துக்கடியில் இருந்த குளோரின் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த கசிவை தொடர்ந்து, சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 500 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் இருந்த பொதுமக்கள், உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் மேற்கொண்ட வாயு துப்புறவு பணி இரவு மணி 8.36 வாக்கில் நிறைவடைந்தது.