கோலாலம்பூர், நவ 6 – தீபாவளி பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவம்பர் 9 முதல் 15 வரை எட்டு உணவுப் பொருட்களை விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் , சிவப்பு மிளகாய், எலும்புகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி (lamb ) , ஆஸ்திரேலிய பருப்பு, தேங்காய் (மொத்தக் கட்டுப்பாட்டு விலை) மற்றும் துருவிய தேங்காய் (சில்லறை கட்டுப்பாட்டு விலை) மற்றும் தக்காளி ஆகியவவையும் இந்த பொருட்களில் அடங்கும்.
“ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் உள்ள பொருட்களுடன் புதிதாக சேர்க்கப்பட்ட பொருட்களும் இந்த பட்டியலில் இப்போது இடம்பெற்றுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின இடைக்கால அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பயனீட்டாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு விலை நிலைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் தீபாவளி விலைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.