கோலாலம்பூர், ஜன 5 – பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பவர்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து இந்தியக் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு முயற்சியில் ஈடுபட விருப்பதாக மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சரவையில் தமிழ் தெரிந்த அமைச்சர்கள் இல்லை என்பதாலும், சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் இருப்பதாலும் இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கு சரியான தருணம் இது என சிலாங்கூர் மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான புனிதன் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள இந்தியக் கட்சிகளை ஒரே மேடையின் கீழ் ஒன்றிணைக்கும் வகையில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் புத்ராஜெயா மற்றும் அனைத்து மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இது சமூகத்திற்கு வலுவான நிலைப்பாட்டை வழங்கும். அதோடு கல்வி, தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விவகாரங்களும் விவாதிக்கப்படும் என்று புனிதன் கூறினார்.
14 இந்தியக் கட்சிகளுக்கு அழைப்புகள் விடுக்கவிருப்பதாகவும் குறைந்தபட்சம் ஐந்து பேர் விவாதத்தில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.