பேங்காக் , பிப் 9 – தாய்லாந்து விமானம் புறப்பட தயாராய் இருந்தபோது யாரோ தம்மை கொல்ல வருவதாக கூச்சல் போட்டுக்கொண்டே திடீரென விமானத்தின் கதவை திறக்க முயன்ற கனடாவைச் சேர்ந்த ஆடவர் மீது பேங்காக் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 40 வயதுடைய அந்த ஆடவர் தாய் ஏர்வேஸ் விமானத்தின் அவசர வேளையில் வெளியேறும் கதவை திறக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார். புதன்கிழமையன்று பேங்காக்கிலிருந்து சியாங் மாய்க்கு புறப்படவிருந்த விமானத்தில் அந்த ஆடவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
அந்த சம்பவத்தினால் 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றது-தீங்கு விளைவிப்பது மற்றும் விமான பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி நட்டாவுட் நொய்சோர்ன் தெரிவித்தார்.