லஹாட் டத்து, ஜனவரி 9 – சபா, லஹாட் டத்து, டாத்தாரான் பால்மாவிலுள்ள, நகை கடை ஒன்றில், அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையிட முயன்ற ஆடவன் ஒருவனின் செயல் தோல்வியில் முடிந்தது.
நேற்று காலை மணி 8.39 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, லஹாட் டத்து போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் டாக்டர் ரோஹான் ஷா அஹ்மாட் தெரிவித்தார்.
காலையில் வியாபாரத்தை தொடங்க, கடையின் நிர்வாகி நகைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த தலைகவசம் அணிந்த ஆடவன் ஒருவன், போலி துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, சிவப்பு நிற பை ஒன்றை தந்து அதில் நகைகளை போடுமாறு பணித்துள்ளான்.
எனினும், சம்பந்தப்பட்ட நிர்வாகி, மோதிர அளவை சரிபார்க்க பயன்படுத்தப்படும் இரும்பு உலோகத்தை, அவ்வாடவனை நோக்கி வீசியதை தொடர்ந்து, பீதியடைந்த அவன், அவ்விடத்தை விட்டு கம்பி நீட்டியதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவை கொண்டு, அவ்வாடவனை தேடும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.