புத்ராஜெயா, டிசம்பர்-26 – மலேசியாவில் தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான உரிமத்தைப் பெறும் முயற்சியில், Telegram, WeChat ஆகிய 2 சமூக ஊடகங்கள் இறங்கியுள்ளன.
அவற்றின் கடப்பாட்டைப் பாராட்டுவதாகக் கூறிய மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC, தேவைப்படும் நிபந்தனைகளை இந்த இடைபட்ட காலத்திலேயே அவைப் பூர்த்திச் செய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தது.
ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரவுள்ள அப்புதிய விதிமுறையானது, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.
அதோடு பயனீட்டாளர்களையும் பாதுகாத்து, சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு எதிரான மேலாண்மையை வலுப்படுத்தவும் அவ்வுரிமம் பயன்படுமென MCMC விளக்கியது.
குறிப்பாக சிறார்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, சமூக ஊடகங்களை ஏற்க வைப்பதை அந்த உரிமம் உறுதிச் செய்யும்.
பாதுகாப்பான இணையம், சிறந்த பயனர் அனுபவம், ஆபத்தான உள்ளடக்கத்திலிருந்து பாதுகாப்பு என இதன் மூலம் மலேசியர்கள் நன்மையடைவர்.
எனவே, சமூகப் ஊடகச் சேவை வழங்குநர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிமத்துக்கு விண்ணப்பிக்குமாறு MCMC கேட்டுக் கொண்டது.
நாட்டில் குறைந்தது 8 மில்லியன் பயனர்களை வைத்திருக்கும் சமூக ஊடகங்கள், வரும் ஜனவரி முதல் கட்டாயம் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.