தஞ்சோங் மாலிம், பிப்ரவரி 22 – பேராக், தஞ்சோங் மாலிம், பண்டார் பெஹ்ராங்கிலுள்ள, வீடொன்றில் புகுந்த முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள், ஐயாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள நகைகளுடன் கம்பி நீட்டினர்.
அச்சம்பவம் நேற்று அதிகாலை மணி 6.30 வாக்கில் நிகழ்ந்ததாக, முஹாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹஸ்னி முஹமட் நாசிர் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, அவ்வீட்டில் புகுந்த இரு கருப்பு முகமூடி அணிந்த ஆடவர்கள், 59 வயது பெண் பராமரிப்பாளர் ஒருவரையும், மூன்று பிள்ளைகளையும் பாராங் கத்தியை காட்டி அச்சுறுத்தி, பணத்தையும், நகைகளையும், கைப்பேசி ஒன்றையும் கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றனர்.
அதோடு, அப்பெண்ணின் காரை எடுத்துச் சென்ற அவர்கள், சம்பவ இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அக்காரை கைவிட்டுச் சென்றது அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஹமட் ஹஸ்னி சொன்னார்.
எனினும், அந்த கொள்ளைச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது கண்காணிப்பில் இருந்த பிள்ளைகளுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.