ஈப்போ, நவம்பர் 8 – உங்கள் வீடு அல்லது அறையை வாடகைக்கு விடுவது, அவ்வளவு எளிதான விஷயமல்ல. பல சமயங்களில் அது முற்றாக சேதப்படுத்தப்படும் அபாயம் அதிகம் உள்ளது.
அதுபோன்ற ஒரு சூழலை, பேராக், ஈப்போவைச் சேர்ந்த அப்துல் லத்திப் அப்துல் ரசாக் எனும் ஆடவர் ஒருவர் எதிர்நோக்கியுள்ளார்.
குப்பை கூளங்களால் நிரப்பப்பட்டு, முற்றாக சிதைக்கப்பட்ட தனது பெற்றோரின் வீட்டை சுத்தம் செய்து சரி செய்யும் மிகப்பெரிய பணியை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
வீடு முழுவதும், வரவேற்பு அறை தொடங்கி, சமையல் அறை, படுக்கை அறைகள் என அனைத்து இடங்களில், குப்பை கூளங்களும், காலி போத்தல்களும், கருப்பு பைகளும் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களை லத்திப் தனது முகநூல் பதிவில் இணைத்துள்ளதை தொடர்ந்து அது வைரலாகியுள்ளது.
பழுதடைந்த அந்த வீட்டை சீர் செய்ய தமக்கு ஆறாயிரம் ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தை ஈட்டி தருமென வாடகைக்கு விடப்பட்ட அந்த வீடு, தற்போது தங்களுக்கே நிதிச் சுமையாக மாறிவிட்ட அவலத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பணம் எதுவும் வாங்காமல், யார் என்று அறியாத அந்நியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை தாம் இப்பொழுது உணர்வதாகவும், இனி யாருக்கும் பாவம் பார்க்க கூடாது என்ற பாடத்தை இதிலிருந்து தாம் கற்றுக் கொண்டதாகவும் லத்திப் பதிவிட்டுள்ளார்.
வீட்டை வாடகைக்கு விட வேண்டுமானால், முறையாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோடு, முன் பணத்தையும் தவறாமல் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த பதிவு இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ள வேளை ; இணையவாசிகள் பலர் அதனை கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்.