கோலாலம்பூர், ஜன 9 – அரசியல் சூழ்ச்சிகளில் அரண்மனை பங்கேற்காது என மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah தெரிவித்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். பிரதமரும் Madani அரசாங்கத்தின் தலைவருமான தாம் நாட்டை தொடர்ந்து நிர்வகிக்கும்படியும் Sultan Abdullah பணித்துள்ளார் என தமது முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார். ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கும் இவ்வேளையில் பேரரசருடன் வாரந்திர சந்திப்புக்குப் பின் அன்வார் இதனை தெரிவித்தார்.
பெரிக்காத்தான நேசனல் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமருக்கான ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகின. அன்வார் நிர்வாகத்தை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் குறிப்பிட்ட சில அரசாங்க பிரதிநிதிகளுக்குமிடையே கலந்துரையாடல் ஐக்கிய அரபு சிற்றரசில் துபாய் சதித்திட்டம் என்ற பெயரில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.