பட்டர்வெர்த். நவ 3 – போர்ட் கிள்ளான் வேஸ்ட் போர்ட் துறைமுகத்தில் பினாங்கு சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 400,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுக்களை கொள்கலனில் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது. சுங்க அமலாக்கத்துறை மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு பிரிவின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையின்போது போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு சுங்கத்துறையின் இயக்குனர் Hamisam Kalip தெரிவித்தார்.
கொள்கலனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடனடி மீ என்று எழுதப்பட்டிருந்த 1,832 பெட்டிகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிகரெட்டுக்கள் இருந்தாகவும் அவை 461,000 ரிங்கிட்டிற்கும் மேலான மதிப்பை கொண்டதாக Hamisam Kalip கூறினார். அதோடு அந்த சிகரெட்டுகளுக்கான சுங்க வரி மதிப்பு 3.7 மில்லியன் ரிங்கிட்டாகும். அந்த சிகரெட்டுகள் மேற்காசிய நாடுகளிடமிருந்து வந்தவை என ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சிகரெட்டுகள் அனைத்தும் உடனடி மீ என்று அடையாள முத்திரையிடப்பட்ட பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக Hamisan Kalip தெரிவித்தார்.