மலாக்கா, ஜனவரி 9 – மலாக்கா உயிரியல் பூங்காவிலுள்ள, விலங்குகள் குறிப்பாக பெங்கால் புலி ஒன்று உடல் மெலிந்து வற்றலும் தொற்றலுமாக காணப்படுவதற்கு, போதிய உணவு வழங்கப்படாததே காரணம் என முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மலாக்கா வனவிலங்கு பூங்கா மறுத்துள்ளதோடு, அடிப்படை அற்ற அந்த குற்றச்சாட்டு தொடர்பில் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளது.
எல்சா (Elsa) என அழைக்கப்படும் அந்த பெங்கால் வெள்ளை புலி நோய்வாய்பட்டுள்ளது.
குறிப்பாக, அப்புலி பிண்ட எலும்பு மற்றும் முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த சுகாதார பிரச்சனை, அப்புலியின் உணவு உட்கொள்ளும் முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அது உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவதாக, ஹாங் துவா ஜெயா நகராண்மைக் கழக தலைவர் டத்தின் சாபியா ஹரூன் தெரிவித்தார்.
அப்புலிக்கு அன்றாடம், சுமார் ஐந்து கிலோகிராம் எடையிலான ஐந்து கோழிகள் உணவாக வழங்கப்படுகின்றன. எனினும், அதில் 80 விழுக்காட்டு உணவை மட்டுமே அதனால் உட்கொள்ள முடிவதையும் சாபியா சுட்டிக் காட்டினார்.
மலாக்கா உயிரிழயல் பூங்காவிலுள்ள, வனவிலங்குகளை, மாதம்தோறும், மாநில PERHILITAN – தேசிய பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிடுவதும் வழக்கமாகும்.
அதனால், எதிர்காலத்தில் அதுபோன்ற தவறான கண்ணோட்டங்கள் நிலவுவதை தவிர்க்க, விலங்குகளின் சுகாதார குறிப்புகளும் இனி வருவையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படுமென சபியா சொன்னார்.
முன்னதாக, உடல் மெலிந்து சேர்வாக காணப்படும் புலி ஒன்றின் காணொளி வைரலாகி கடும் கண்டனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.