
புத்ரா ஜெயா மே 18- அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் சிறுவன் திருமுருகனின் கல்வி எதிர்காலம் பாதிக்காமல் இருக்க அச்சிறுவனுக்கு குடியுரிமை பெற்று தரும் முயற்சியில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரின் உதவியோடு டிரா மலேசிய களம் இறங்கியுள்ளது. இன்று புத்ரா ஜெயா IOI Mall பேராங்காடியில் மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் மக்கள் குறைகளை கேட்டறியும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து தனது மகன் திருமுருகனுக்கு குடியுரிமை பெற்று தரும்படி தந்தை விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
திருமுருகன் பிறந்த பிறகு அவரின் தாயார் எங்கே போனார் என்று தெரியவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக தன் மனைவியை விக்னேஸ்வரன் தேடிக் கொண்டிருக்கிறார். முறையான பதிவு திருமணம் இல்லாததால் திருமுருகனுக்கு குடியுரிமை கிடைப்பதில் இப்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது ஆறு வயதாகி விட்ட திருமுருகன் அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் காலடி எடுத்து வைப்பதால் அவருக்கு குடியுரிமைக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யும்படி டிரா மலேசிய இயக்கத்தின் தலைவர் சரவணனை சிவகுமார் கேட்டுக் கொண்டார்.