கோலாலம்பூர் , ஜன 10 – முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுடினின் மனைவி மற்றும் அவரது இரு மகன்களையும் எம்.ஏ.சி.சி (MACC) இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள கட்டிடம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அம்மூவரையும் எம்.ஏ.சி.சி அழைத்துள்ளது. புத்ரா ஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் டைய்மின் மனைவி நைமா காலித் மற்றும் அவரது இரண்டு மகன்களிடம் இன்று காலை எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் அதன் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 60 மாடி கொண்ட இல்ஹாம் (Ilham) கோபுரத்தை எம்.ஏ.சி.சி பறிமுதல் செய்தது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் 38 ஆவது உட்பிரிவு (1) விதியின் கீழ் அந்த அசையா சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து டைய்ம் மீது லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் ஆஸாம் பாக்கி கூறியிருந்தார். எனினும் ஊழல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டதாக கூறப்படுவதை டைய்ம் மறுத்தார்.