அலோர் காஜா, ஜனவரி 8 – மலாக்கா, லெண்டு, ஜாலான் ரெம்பியாவிலுள்ள, பெளத்த ஆலயம் ஒன்றில், நேற்றிரவு இரு நாகப்பாம்பு சண்டையிட்டுக் கொண்டிருந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது.
எனினும், APM – பொது தற்காப்பு படை வீரர்களின் உதவியோடு பின்னர் அந்த ஊர்வன விலங்குகள் பிடிப்பட்டன.
அச்சம்பவம் தொடர்பில், நேற்றிரவு மணி 8.08 வாக்கில், அவசர அழைப்பு கிடைத்ததை, அலோர் காஜா பொது தற்காப்பு படை அதிகாரி லெப்டனன் அப்துல் ஹடி பஹாரோம் உறுதிப்படுத்தினார்.
ஆலயத்திற்கு பின்னால் செல்ல, ஆலய பராமரிப்பாளர் விளக்கை போட்ட போது, அங்கு இரு நாகப்பாம்புகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
பொது தற்காப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, அதில் பெரிய பாம்பு, சிறிய பாம்பை கொன்று அதனை விழுங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆறு மற்றும் நான்கு மீட்டர் நீளமும், மூன்று முதல் ஐந்து கிலோகிராம் எடையிலான அவ்விரு நாகப்பாம்புகளும் பிடிக்கப்பட்டு, அலோர் காஜா பொது தற்காப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன.