
கிள்ளான், பிப்ரவரி-20 – சுங்கை பூலோ சிறைச்சாலை காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து SOSMA கைதிகளையும், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சையளிக்குமாறு, கிள்ளான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், முறைப்படி விசாரணை நடைபெற ஏதுவாக போலீஸில் புகார் செய்யுமாறும், அக்கைதிகளை நீதிபதி அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட 32 SOSMA கைதிகளை இன்று தனியாகச் சந்தித்து உண்மை நிலவரங்களைக் கேட்டறிந்த பிறகு, நீதிபதி Norliza Othman அவ்வுத்தரவுகளை வழங்கினார்.
அதன் போது, எப்படி தாங்கள் தாக்கப்பட்டோம், உடலில் எந்த பகுதியில் காயமேற்பட்டது, யாரெல்லாம் தாக்கினார்கள் என்பன போன்ற விவரங்களை, வாய்மொழியாக தனது கட்சிக்காரர்கள் வழங்கியதாக, 15 SOSMA கைதிகளின் வழக்கறிஞரான T Harpal Singh கூறினார்.
அந்த 32 பேரில் 25 கைதிகள், சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், போலீஸில் புகார் செய்வதற்காக அக்கைதிகள் போலீஸ் நிலையங்களுக்குக் கூட்டிச் செல்லப்படுவது சந்தேகமே என, சக வழக்கறிஞரான ராஜேஷ் நாகராஜன் FMT-யிடம் கூறினார்.
மிதிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, குத்தப்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மீண்டும் தடியால் அடிக்கப்பட்டதாக அக்கைதிகள் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் அப்படி அடித்துக் கொடுமைப்படுத்தக் கூடாது என FMT-யிடம் ராஜேஷ் சொன்னார்.
SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் முன்னதாக உண்ணாவிரதம் இருந்தனர்; அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அவர்களின் சில குடும்பங்கள் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே உண்ணா விரதம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.