கோலாலம்பூர், டிசம்பர்-14, நாட்டின் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில், அரசியலையும் இன விவகாரங்களையும் கலக்காதீர் என, சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் (Datuk Seri Tiong King Sing) கேட்டுக் கொண்டுள்ளார்.
MOTAC எனப்படும் தமது தலைமையிலான சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சு அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகளைக் கவர அயராது உழைத்து வருகிறது.
ஆனால், சீன நாட்டு சுற்றுப்பயணிகளுக்கே அரசாங்கம் முன்னுரிமைத் தருவதாக சில தரப்புகள் குறைக்கூறி வருகின்றன.
சீன சுற்றுப்பயணிகளுக்கு எதிரான அவர்களின் பொறுப்பற்றச் செயலால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சி மந்தமடையலாமென, டத்தோ ஸ்ரீ தியோங் சுட்டிக் காட்டினார்.
மலேசியா மட்டுமல்ல, அதிக செலவிடும் சக்தியைக் கொண்ட பெரியச் சந்தை என்பதால் சவூதி அரேபியா கூட சீன சுற்றுப் பயணிகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது.
ஆனால், இங்கே சிலர் அதனை இன விவகாரமாகப் பார்ப்பது ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் கூறினார்.
இவ்வேளையில், மலேசியாவுக்கு இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 22.5 மில்லியன் சுற்றுப் பயணிகள் உட்பட மொத்தம் 34.2 மில்லியன் பேர் வந்துள்ளனர்.
அவ்வெண்ணிக்கை, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்ததை விட அதிகமென டத்தோ ஸ்ரீ தியோங் சொன்னார்.