குளுவாங், ஜன 11 – வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகித்துவிட்டு திரும்பிய பூர்வகுடிகள் மேம்பாட்டுத் துறையின் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. செடோஹோக் பூர்வகுடி கிராமத்திற்கு அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த நான்கு பணியாளர்களும் உயிர்காப்பு அங்கியை அணிந்திருந்ததால் அவர்கள் பாதுகாப்புடன் உயிர்தப்பினர். வெள்ள நீரோட்டம் அதிகமாக இருந்த பகுதியில் திடீரென அந்த வாகனம் அடித்து செல்வதற்கு முன் வலது மற்றும் இடதுபுறம் நகர்ந்து சுமார் 10 மீட்டர் தூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மரத்தில் மோதியது. வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த வாகனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பொது தற்காப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் படை உறுப்பினர்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்.