கோலாலம்பூர், ஜன 22 – மலேசியர்களிடையே ஆதரவு இருக்கிறதா என்பதை நிருபிப்பதற்கு துணிச்சல் இருந்தால் தேர்தலை நடத்துவீர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் சவால் விடுத்திருக்கிறார். தமது அதிகாரத்தை அன்வார் தவறாக பயன்படுத்துகிறார் என்பதோடு தமது அரசியல் எதிரிகளை விசாரணை நடத்துவதற்கு MACC -யை பயன்படுத்தி வருவதோடு நீதித்துறையில் செல்வாக்கை பயன்படுத்தி தனது நண்பர்களை சட்டத்திலிருந்து விடுவித்து வருவதாகவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டு காலம் தாம் அதிகாரத்தில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டதில்லையென்றும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் நான் பிரதமராக இருந்தபோது இத்தகைய சம்பவங்கள் எல்லாம் நடந்ததில்லையென என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நான் வெற்றி பெற்றுள்ளேன். ஐந்து தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளேன் . என்னை வெளியேற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பு இருந்தது, எனது பதவியை தவறாக பயன்படுத்தியிருந்தால் அந்த தேர்தல்களில் நான் வெற்றி பெற்றிருக்கமாட்டேன் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு இன்றே தேர்தலை நடத்தும்படி அன்வாருக்கு சவால் விடுப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார்.