குவாலா சிலாங்கூர், பிப்ரவரி 24 – தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்கு போலீஸ் 50 விழுக்காடு வரையிலான கழிவுச் சலுகையை வழங்குகிறது.
பிப்ரவரி 23 முதல் 25 வரை குவால சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் மத்திய மண்டல மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தான் அச்சலுகை வழங்கப்படுகிறது.
அபராத பாக்கி வைத்திருப்போர் சலுகைக் கட்டணத்தில் அதனைச் செலுத்துவதற்கு இது அருமையான வாய்ப்பு.
ஆனால் எல்லா சம்மன்களுக்கும் இது பொருந்தாது என போலீஸ் கூறியது.
அந்த 50 விழுக்காடு கழிவுச் சலுகையில் இடம் பெறாத 10 வகை சம்மன்களில், விபத்துகளில் சிக்கியது, நீதிமன்றம் வரை சென்றது, அபாயகரமாக வாகனங்களை முந்திச் சென்றது, அவசரப் பாதையில் பயணித்தது, சாலை சமிக்கை விளக்கை மீறியது உள்ளிட்டவற்றுக்காக கிடைத்த சம்மன்களும் அடங்கும்.
இந்த அபராத கழிவுச் சலுகையை, மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடமான குவால சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் தான் அனுபவிக்க முடியும்.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அங்குள்ள போலிஸ் முகப்புகளில் சம்மன்களைச் செலுத்தலாம்.
இது நிபந்தனைகளுக்கும் உட்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளை வரை மட்டுமே அச்சலுகை அங்கு வழங்கப்படும் என்பதால், அதனைப் பயன்படுத்தி அபராதத் தொகையைச் செலுத்துமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுகின்றனர்.
ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இந்த மடானி மக்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது.
அங்கு மத்திய, மாநில அரசுத் துறைகளின் 163 வகையான சேவைகளை மக்கள் பெற முடியும்.