ஜோகூர் பாரு, ஏப்ரல் 2 – ஜோகூர் பாருவில் பதின்ம வயது பையனை ஆடவர் கும்பலொன்று சுற்றி வளைத்து தாக்கியச் சம்பவத்திற்கு, கருத்து மோதலும் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்துக் கொண்டதுமே காரணம் என தெரிய வந்துள்ளது.
தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் அதனை உறுதிபடுத்தினார்.
அச்சம்பவம் உண்மையில் கடந்தாண்டு மே மாதம் தாமான் புத்ரி வாங்சாவில் உள்ள கால்பந்து மைதானத்தின் pondok-வில் நிகழ்ந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட 17 வயது பையன், அடையாளம் தெரியாத கும்பல் தன்னைத் தாக்கியதாக அன்றைய நாளே போலீசில் புகார் செய்துள்ளான்.
எனினும் அச்சம்பவத்தில் அவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை; மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவும் இல்லை என ரவூப் செலாமாட் கூறினார்.
அவனைத் தாக்கிய கும்பலைத் தேடிக் கண்டுபிடிக்க, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ரவூப் சொன்னார்.
அந்த கூடாரத்தில் அவன் உட்கார்ந்திருந்த போது, திடீரென வந்து கும்பல் அவனது முகத்தில் பல தடவை குத்துவது, நேற்று முதல் வைரலான 2 காணொலிகளில் தெரிகிறது.
பயத்தில் இருக்கும் அப்பையனை, அவர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும், சட்டையைக் கழற்றச் சொல்லி மிரட்டுவதும், மன்னிப்புக் கேட்க வலியுறுத்துவதையும் அதில் காண முடிகிறது.
வயதுக் குறைந்த பையனைக் கேலி வதை செய்யும் அந்த bully கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.